திருவாசகம் - 1

From Wikisource
Jump to navigation Jump to search
கலையொடு கலையைத் தாக்கிக்
கண்ணின் மேல்கருணை நாட்டி
மலையொடு மலையைத் தாண்டி
வளர்ந்தவள் பதமே கண்டு
சிலையொடு சிலையில் ஆளும்
சிவபரா கிருபை என்றே
அலைகடல் முழக்கம் போல
அவள் உரை கூறலுற்றாள்
கூறிய வாசகத்தை இந்தக் குவலையத்தோர் காண
மீறிய மொழிகள் சொல்லி விளம்புவார் நாசம் ஆகும்
தேறிய பூதத்தோடு தேர்ந்து உணர்ந்தவரே வாழ்வார்
கூறிய வாசகத்தை உள்ளம் கொண்டவர் குருவைக் காண்பார்
ஒருதிரு விபூதி உண்டை ஒருஇரு மிச்ச மாகும்
ஒருதிடத் தேங்காய்ப் போலும் ஒரு மனத்திரணை போட்டு
கருதிட வெற்றிலை பாக்கு கனிந்திடுவோர்க்கு மூவர்
வருகிட ஞான மெய்யின் வழி இது வாகும் தானே
மனுமொழி இதுவாம் என்று மதத்துடன் பேசுவோர்க்கு
இனிதல்ல வீண்தான் என்று இயம்பிய பகைஞர் தம்மை
குனிதவள் துர்க்கை சென்று கொன்றவள் நரகம் பூத்தி
கனிதுடன் துர்க்கை வாரி கடல்தீர்த்தம் ஆடுவாளே
எறும்பு கடை யானைமுதல் யெண்பத்துநான் குயிர்கள்
எழுகடல் பதினாலு புவிகளும் இரதிமதி சூரியன்
பருதி பாலாளியும் மிகவாயு முதலாய்
துரும்பு மாமலையும் மாமரச் சோலயும் சேடனும்
தலைமோடனும் அறியவே தென்கேழத் தேவரும்
இங்குள்ள மூவரும் தேச தெய்வேந்திரன் அறியவே
வாச முனிவோர்களும் வேத சன்னாசியும்
மறையாறு சாத்திரம் அறியவே அறியவே மண்டலம் அளந்தகை
கொண்டெழுதும் வாசகம் மண்டலர்கள் எவரும் அறியவே
வறும்பகல் தொளாயிரத்துத் தொண்ணூற் றெட்டாண்டினில்
வளர் சாம்பசிவ மூர்த்தியும் பராபர
ஸ்ரீராமரும் பதியேறும் மூர்த்தியும்
வன்மை பார்த்து இந்தக் கலியுகத்தில்
படூர நீசக் கலியால் வரும் வன்மையை பகர்ந்து
திருவாசகம் எழுதிப் பலநூல் அறிந்தவர் எவரும்
பக்தியுடனே யெந்தக் காலமும் பணிந்து திருவாசகத்தை
முத்தி அணைந்தோருக்கு மிகுபலன் உண்டாம் பகரக் கேளு
நத்தியுடன் பூலோகக் கலியுகத் தேசத்தில்
நடக்கும் முறை தானும் கேளிர்

நல்ல வீரபுரந்தர தர்மராசா அங்கிசத்திலே நாடும் ஒரு மதலை பிறந்து வந்தவுடன் நல்ல அருணாசலத்திலே வாலிபப் பிள்ளையாய் இருக்கிறார். அந்த பூலோகக் கலியுகத்திலே ஆசாரமாய் இருக்கிற பேர்களுக்கும் அழுக்கான புத்தியாய் இருக்கிற பேர்களுக்கும் அவரவர் ஆங்காரமகியே அழிந்து போவார்கள். அதன் மேல் பதினெட்டு துர்க்கையம்மாள் பிறந்து அந்தக் கலியுக பஞ்சாமிர்த இராச்சியத்திலே வருகிறார்கள். வந்தவுடனே மூன்று நாட்கள் இருள் மூடி யானை துதிக்கைபோல் மழை பெய்யும். அதில் சில துர்ச்சனர்கள் எல்லாம் மாண்டு போவார்கள். அதின் மேல் புத்தியாய் இருக்கிற பேர்களுக்கும், பிள்ளை இல்லாமல் இருக்கிற பேர்களுக்கும், கண் இல்லாமல் இருக்கிற பேர்களுக்கும், தனம் இல்லாமல் இருக்கிற பேர்களுக்கும், பராபர மூர்த்தியும் சாம்பசிவ மூர்த்தியும் ஸ்ரீராமஜெயரும் தீட்சையாகித் திருமனது இரங்கிப் பக்திக் காரணங்களைச் சோதித்துப் பகிர்ந்து அவரவர் கேட்ட வரங்களை எல்லாம் கொடுப்பார்கள். இன்னும் சிறிது நாளையிலே சிறிது ஜனம் தெய்வீகமாய்ப் போவார்கள். முன்னுக்கு மழை தட்டும் உலகில் பல வஸ்துக்களும் பலிக்கும் எனப் பகர்ந்தார். சில நீசர் மிகக்கறுப்பை நினைவு இல்லாது தொட்டு மிகப்பாசமடைந்து அலைந்து அமிழ்ந்து போவார்கள்.

வாலி சுக்ரீவனும் பண்டாரமாகிப் போவார்கள். வாச்சி கொழுக் கலப்பை எல்லாம் நாசமாகிப்ப் போய்விடும். முன்னாலே துலுக்கர் தம்மை நாசம் பண்ணுகிறதற்காகவே துர்க்கை அம்மளைப் பிறவி செய்து அனுப்புகிறோம். பிராமணர் நன்றாய்ச் சுகத்துடன் வாழுவர். புவியில் முகத்து லிங்கம் இல்லாமல் இருக்கிற பேர்களுக்குப் பிரமதேவரை அனுப்பி வைக்கிறோம். பிரமதேவர் புவி மீதிலே வந்து பக்தி காரணங்களைச் சோதித்துப் பொல்லாத பேரைத் தெரிந்து பிடித்துப் புவிக் கிராம தேசத்தில் வாழும் தேவதைக்குப் பூசை பண்ணிப் போடுவார் யெனப் புகட்டினார். காவேரி அற்றுக்குள்ளே மூன்று பொதி மங்கலியம் கவிழ்ந்து அடைய வேணும் என்றும், இன்னும் சிறிது நாளையிலே கேள்வி கேளாமல் இருக்கிற பேர்களும், துர்ச்சனராய் இருக்கிற பேர்களும் வர்த்தகராய் இருக்கிற பேர்களும், தம்மில் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டு மாண்டு போவார்கள் என்றும், போனபேர்கள் போக இருக்கிற பேர்கள் புண்ணிய புருஷரைத் தரிசனம் பண்ணிக் கொண்டு சர்வ பாக்கியத்தை அடைவார்கள் என்றும், மூன்று லொகத்துக்கும் ஒரு வால் வெள்ளி உண்டாக்கி நெருப்புப் போட்டுக் கொண்டு வருகிறோம். அதனால் மானிடர் எல்லாம் மிரண்டு உட்கொள்ளை புரக்கொள்ளை அடிப்பார்கள் என்றும் நமக்கு நன்றாய்த் தெரியும். நாம் அதற்கு மேல் போலோகக் கலியுகப் பஞ்சாமிர்த இராச்சியத்திலே பண்டார வேசமாய் வருகிறோம். நாம் வருகிற போது மண்ணேல்லாம் கிடுகிடென்றாடும். மலையும் வானமும் முழங்கித் திடுக்கிடும். அப்போது அதிலே அநேக துர்ச்சனர்கள் எல்லாம் மாண்டு போவார்கள். போனபேர்கள் போக இருக்கிற பேர்கள் புண்ணிய புருஷராய் இருப்பார்கள். மந்திர தந்திர வைத்தியங்கள் எல்லாம் மறைந்து போய்விடும். வாதை பேய்கள் எல்லாம் வட கயிலாசத்தில் போய்ச் சட்டுத்தீர்ந்து போவார்காள். ஏழு சமுத்திரத்திலே மூன்று சமுத்திரம் நீர் உள்வாங்கிப் போகவும், ஒரு சேர்வை விபூதி ஆறு சக்கரத்திற்கு விற்கவும், ஒரு லிங்கம் மூன்று வராகனுக்கு விற்கவும், ஒரு களஞ்சிச் சலம் எடுக்கவும், இரண்டு நாழிகை வழிக்கு ஒரு தண்ணீர் பந்தலும், மூன்று நாழிகை வழிக்கு ஒரு தர்மசாலையும் நன்றாய் முகியும்.

தர்மம் கொடுக்கிற பேர்களுண்டு, தர்மம் வாங்கிற பேர்கள் இல்லை என்று சொல்லுகிற வெயிலாள் மடக்கொடியாள் வயிற்றிலே நாடுமொரு மதலை பிறந்து பத்து வருசம் ஆச்சுது. மகா அருணாசலத்திலே நாம் வாலிபப்பிள்ளையாய் இருக்கிறோம். அந்த வாலிபப்பிள்ளை என்ன சொல்லுகிறார் என்றால், வேரபுரந்தர தர்மராசா வழியிலே விசி நாராயணர் இங்கே வந்து மூன்று மாதவத்துக்குத் தவசு பண்ணி இரண்டு மாதத்துக்கு மேல் வருகிறார். வந்த உடனே அந்நியோன்னியம் கலகம் ஆகும். அந்தக் கலகத்திலே ஒருவருக்கு ஒருவர் அசுத்தியாய்ப் போவார்கள். போன பேர்கள் போக இருக்கிற பேர்கள் புண்ணிய புருஷராய் இருப்பார்கள். அவர்களுக்கு வேண்டிய பாகியத்தை கொடுப்போம் 998-ல்.

பாக்கியம் கொடுப்போம் நாமும் பலனுடன் வாழுவோர்க்கு
நோக்கிய கருணை உண்டாம் நோவில்லா திருந்து வாழ்வார்
தாக்கிய வாசகத்தின் தன்மையை நம்புவொர்க்கு
ஆக்கிய வைகுண்ட வீடு வந்தவர் வழ்வார் தாமே
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம்
கனிமொழி சோதி வாக்கும் கையெழுத்தாதி நோக்கும்
துணிவுடன் கேட்டோர் உற்றோர் தொலைத்தனர் பிறவி தானே
வாசித்தோர் கேட்டோர் உற்றோர் மனதினில் உணர்ந்து கற்றோர்
ஆசித்தன் பதமே கண்டு அவ்வழி முறையே நின்றோர்
கோசித்தன் பதமே கண்டு கோமலைப் புவியின் வாழ்வும்
தேசத்தின் செல்வத்தோடும் சிறப்புடன் இருந்து வாழ்வார்


திருமொழி வாசகந் தன்னை
தேசத்தில் வரும் முன்னாக
வருவது திடனாம் என்று வழுத்தினோம்
தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று எட்டில்
ஒருதிருக் கோட்டமாக ஓர்
ஆயிரத்தெட்டாம் ஆண்டில்
வருகென வந்து நாங்காள்
அம்மானையில் வருத்தினோமே


வருத்தினோம் அம்மனை தன்னில்
மானமாய்ப் புதிய தாக்கிக்
கருத்தினுள் அகமே கொண்டு
கவனித்தோர் அவர்க்கே தாக்கும்
உர்த்தில்லாக் கேட்போர் எல்லாம்
ஓருரை வெளியே காணார்
சிரித்துரை கேட்போர் எல்லாம்
சிவபொருள் வெளியே காண்பார்


உலகில் மனுக்கள் தமிழாலே
உவமை உரைத்து விட்டாற்போல்
கலகமுடனே என்மொழியைக்
கண்டு பழித்து னகைத்தோரை
அலகைத் துலைத்து நரகதிலே
ஆணி அறைந்து அவனிதனில்
குலையக் குலைத்துத் தீநரகில்
கொண்டே போடச் சொல்வேனே


எந்தன் மொழியும் எனெழுத்தும்
ஏடாய்ச் சேர்த்து இவ்வுலகில்
சிந்தை மகிழ்ந்த அன்பருக்குத்
தெரியத் திறமாய் எழுதி வைத்தேன்
எந்தப் பேரும் என்மொழியை
எடுத்தே வாசித்து உரைத்தோரும்
சந்தமுடனே வாழ்ந்து மிகத்
தர்மபதியும் காண்போரே


காண்பார் தர்ம கண்கட்சை
கண்டே மரணம் இல்லாமல்
காண்பார் என்றும் களி கூர்ந்து
கண்ணோன் பதத்தைக் கண்ணாடி
காண்பார் நீதக் கண்ணாலே
கருணாகரராய்க் கவ்வையற்றுக்
காண்பார் என்றும் கயிலாசம்
கண்டே நன்றாய் வாழ்வாரே


இந்த மொழியை தூஷணித்த
இடும்பர் படும்பா டதுகேளிர்
கந்த உலகுக் கலி பிடித்துக்
காண்ணும் உருகிக் கால் உழன்று
குந்தக் குடலும் புறம்பீறக்
கொப்புள் சிலந்தி உண்டாகி
எந்த இடமும் அலைந் தழிவார்
என்னாணை இது தப்பாதே


தப்பா தெனவே சாபமிட்டேன் சத்திபேரில் உண்மை யதாய்
எப்பா ரெல்லாம் அறிந்திடவே இந்த மொழியை எழுதிவைத்தேன்
ஒப்பார் ஒருவர் எழுதார்கள் உலகில் மனுக்கள் தம்மாலே
அப்பா நாதன் எழுதிவைத்த அகிலத் திரட்டு அம்மனையிதே